எந்த வைக்கம் நகருக்குள் நுழையக்கூடாது என பெரியார் தடுக்கப்பட்டாரோ அதே இடத்தில்.. ஸ்டாலின் பெருமிதம்!

- Repoter 11
- 12 Dec, 2024
- 38
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் பங்கேற்றதன் நூற்றாண்டு நிறைவு விழாவில் இன்று பங்கேற்றுப் பேசியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எந்த வைக்கம் நகருக்குள் நுழையக் கூடாது என்று பெரியார் தடுக்கப்பட்டாரோ அதே வைக்கம் நகரில் மாபெரும் நினைவகத்தை எழுப்பி, தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளின் சார்பில் மாபெரும் விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தந்தை பெரியார் தலைமையில் நடந்த வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகளை எட்டியுள்ளது. வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகை வகுத்த போராட்டம்தான் வைக்கம் போராட்டம். வைக்கம் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் கேரளாவில் 'வைக்கம் கோயில் நுழைவு போராட்டத்தின் 100ஆவது ஆண்டு விழா' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்றனர். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
முன்னதாக, ரூ. 8.14 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரியார் நினைவகத்தில் பெரியார் சிலை, புகைப்படங்களின் வரலாறு, நூலகம், பூங்கா போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. நூலகத்தில் பெரியார் எழுதிய புத்தகங்கள் மற்றும் பெரியாரின் பங்களிப்பு குறித்து பல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. 2024 ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருதை தமிழக அரசு சார்பில் கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர், எழுத்தாளர் தேவநூர மகாதேவாவுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அவருக்கு அரசு சார்பில் ஐந்து லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், "இன்று வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்! எந்த வைக்கம் நகருக்குள் நுழையக் கூடாது என்று தந்தை பெரியார் தடுக்கப்பட்டாரோ - எந்த வைக்கம் நகரில் கைது செய்யப்பட்டாரோ, அதே வைக்கம் நகரில் இன்று மாபெரும் நினைவகத்தை எழுப்பி, தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளின் சார்பில் மாபெரும் விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தந்தை பெரியாருக்கு எதிராக யாகம் நடந்த ஊரில், இன்றைக்கு புகழ்மாலை சூட்டியிருக்கக்கூடிய நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுதான் பெரியாரின் வெற்றி! பெரியாரியத்தின் வெற்றி! திராவிட இயக்கத்தின் வெற்றி! அந்த வகையில் சமூகநீதியின் வரலாற்றிலும், இந்த நாள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்!
பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களுடைய முன்னிலையில், பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான நான், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்புடன் இந்த நினைவகத்தை திறந்து வைப்பதில், எனக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய வரலாற்றுப் பெருமையாக அமைந்திருக்கிறது! இந்த நேரத்தில், என் நெஞ்சின் அடி ஆழத்தில் ஒரு சின்ன வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், இந்தக் காட்சியைக் காண நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் நம்மிடையே இல்லையே என்ற எண்ணம்தான் அந்த வருத்தத்திற்குக் காரணம்!
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் நாள், தோள்சீலைப் போராட்டத்தோடு 200-ஆவது ஆண்டு விழா நாகர்கோயிலில் நடந்தது. நானும், சகாவு பினராயி விஜயன் அவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். வைக்கம் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று நான் குறிப்பிட்டு பேசினேன். 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி கேரள அரசின் சார்பில் மிகச் சிறப்பான விழாவை ஏற்பாடு செய்து, என்னையும் அழைத்திருந்தார் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள். இப்போது எங்களுடைய அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கிறார். இந்திய அளவில் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கக் கூடியவர் பினராயி விஜயன் அவர்கள், பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் கட்டுவதற்கான அனுமதியை தந்தது முதல் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் அவர் உறுதுணையாக இருந்திருக்கிறார்.
அவருக்கும், கேரள அரசுக்கும், கேரள அமைச்சர் பெருமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் என்னுடைய அன்பையும், மரியாதையும், நன்றியையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வைக்கம் போராட்டம் எப்படி கம்பீரமானதோ, அதைப் போலவே இந்த நினைவகத்தையும் கம்பீரமாக, அழகியலோடு - அறிவுக் கருவூலமாக உருவாக்கியிருக்க தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். அவருக்கும், இந்தத் துறையின் அதிகாரிகள், அலுவலர்கள், கட்டுமான நிபுணர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்! இதற்கான முன்னெடுப்புகளை மிகச் சிறப்பாக எடுத்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகள்! கேரளம் இயற்கை எழில் கொஞ்சக்கூடிய தலை. இது சிறப்புக்குரிய ஒரு சுற்றுலா தலம். கேரளா கல்வியிலும், அரசியல் விழிப்புணர்ச்சியிலும் முன்னேறி இருக்கக்கூடிய மாநிலம். அப்படிப்பட்ட மண்ணில் சமூக அரசியல் போராட்ட வெற்றியின் சின்னமாக இந்த வைக்கம் நினைவகம் உருவாகி இருக்கிறது! கேரளாவிற்கு வரும் அனைவரும் கட்டாயம் இந்த வைக்கம் நினைவகத்தைப் பார்த்து, ஒடுக்கப்பட்ட மக்கள், அடிமை விலங்கை உடைத்த வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்! வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு கொண்டாட்ட அறிவிப்புகளில் பெரும்பாலனவற்றை நிறைவேற்றியிருக்கிறோம். அதோடு ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தின் மொழி உணர்வுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் போராடி எழுத்துலகில் சாதனைப் படைத்த தேவநூர மஹாதேவா அவர்களுக்கு முதலாவது "வைக்கம் விருது" வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, வைக்கம் போராட்ட நினைவகங்களையும் மிக விரைவில் வெளியிட இருக்கிறோம். பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரின் சிறப்பை பற்றி சொல்லும்போது குறிப்பிட்டதை நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். ''ஒருவர் புறப்பட்டு ஓயாமல் உழைத்து, உள்ளத்தை திறந்து பேசி, எதற்கும் அஞ்சாமல் பணியாற்றி, ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும் - எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கு இல்லாமல் வேறு எங்கேயும் இருந்ததில்லை" என்று சொன்னார். பேரறிஞர் அண்ணா சொன்னதைப் போல, இது நம்முடைய வெற்றியின் சின்னம்! இனி அடைய இருக்கக்கூடிய வெற்றிகளுக்கும் வழிகாட்டுகின்ற சின்னம்!
1924-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் தொடங்கிய இந்த வைக்கம் போராட்டம், மகாதேவர் கோயில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகுத்த போராட்டம்! மனிதர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்திய சமூக கொடுமையை எதிர்த்து நடந்த அந்தப் போராட்டத்தில், வரிசையாக கேரளத் தலைவர்கள் அனைவரும் கைதானார்கள். இங்கிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த தந்தை பெரியார் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அந்தக் கடிதம் கிடைத்ததும், தந்தை பெரியார் அவர்கள் ஏப்ரல் 13-ஆம் நாள் இங்கு வந்தார். ஏதோ ஒருநாள் வந்துவிட்டு, அடையாளப் போராட்டம் நடத்திக் கொண்டு பெரியார் திரும்பிப் போகவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மாத காலம் இங்கேயே தங்கி போராட்டத்தை நடத்தினார். இரண்டு முறை அவரை கைது செய்து, சிறையில் அடைத்தார்கள். அந்த சிறைவாசத்தில், அரசியல் கைதிகளுக்கான மரியாதை தரப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.
இதை கேரளத் தலைவர்களில் ஒருவரான கே.பி.கேசவ மேனன் அவர்கள் "பந்தனத்தில் நின்னு" என்ற புத்தகத்தில் அதைப் பதிவு செய்திருக்கிறார். மகாத்மா காந்தியடிகள் அய்யா பெரியாரைப் பற்றி எழுதி இருக்கிறார். "திருவாங்கூர் கவர்ன்மெண்டார் குரூர் நீலகண்டன் நம்பூதிரியைச் சிறையினின்று விடுவித்து விட்டார்கள் என்பதையும், ஈ.வி.ராமசாமி நாயக்கருக்கு விரோதமாகப் பிறப்பித்த தடை உத்தரவை வாபஸ் வாங்கிக் கொண்டுவிட்டார்கள் என்பதையும் கேட்க வாசகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்" என்று 'யங் இந்தியா' பத்திரிகையில் காந்தியடிகள் எழுதியிருக்கிறார். இப்படி, இறுதிவரைக்கும் போராடினார் தந்தை பெரியார். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது, காந்தியடிகளோடு இருக்கிறார் பெரியார். பெரியாரிடம் ஆலோசனை செய்துவிட்டுதான் திருவிதாங்கூர் ராணியை காந்தியடிகள் சந்திக்கிறார். கோயிலின் மூன்று பக்கம் முதலில் திறந்து விடப்படுகிறது. இது தொடர்பான வெற்றி விழா பொதுக்கூட்டத்திற்கு பெரியார் தலைமை தாங்குகிறார். வைக்கம் போராட்ட வெற்றி விழா 29.11.1925-ல் நடந்தபோது, அதில் கலந்துகொள்ள பெரியாருக்கும், நாகம்மையாருக்கும் அழைப்பு வந்திருந்தது. தலைமை வகிக்கச் சொன்னார்கள். தலைமை வகிக்க மறுத்து, அதற்குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள் வாழ்த்திப் பேசினார். ''உரிமையை மறுத்த அரசாங்கமே இப்போது நம்மை கையை பிடித்து அழைத்துக் கொண்டு செல்கிறது. இதுதான் சத்தியாகிரகத்திற்கு ஏற்பட்ட மகிமை என்று தந்தை பெரியார் பேசினார். பலாத்காரப் போராட்டம் நடத்தியிருந்தால்கூட இந்த வெற்றியை இவ்வளவு சீக்கிரம் பெற்றிருக்க மாட்டோம்" என்று பேசினார் தந்தை பெரியார். இந்த வீரம் மிகுந்த போரில் மறக்க முடியாத இரண்டு பெண்கள், பெரியாரின் மனைவி அம்மையார் நாகம்மாளும், அவருடைய தங்கை அம்மையார் கண்ணம்மாளும்! வைக்கம் போராட்டத்தில் வெற்றிகண்ட தந்தை பெரியாரை அனைவரும் பாராட்டினார்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், "வைக்கம் வீரர்" என்று பெரியாரைப் போற்றினார்! மூதறிஞர் ராஜாஜி அவர்கள், "தீரரைப் போற்றுகிறது தமிழ்நாடு" என்று எழுதினார்! இதையெல்லாம்விட புரட்சியாளர் அம்பேத்கர் எழுதியது மிக முக்கியமானது. "இந்தச் சமூக அமைப்புக்கு எதிராக, தீண்டத்தகாத மக்கள் பொதுச் சாலையைப் பயன்படுத்தும் உரிமையைப் பெற 1924-இல் திருவிதாங்கூர் மாநிலத்தில் எடுத்த முயற்சி மிக முக்கியமானது" என்று புரட்சியாளர் அம்பேத்கர் குறிப்பிட்டார். இதற்குப் பிறகுதான் 'மகத்' போராட்டத்தை தொடங்கினார் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்.
''ராமசாமி நாயக்கர் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். தன் சிந்தனையிலும், செயலிலும் காந்தியத்தை கொண்டிருந்தாலும், சமூக மாற்றமே இந்தியாவுக்கு முதன்மையானது என்று உறுதியாக நம்புகிறவர்" என்று 1928-ஆம் ஆண்டு பாராட்டியவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். 'வைக்கம் போராட்டம்' என்பது, கேரளத்திற்கான போராட்டம் மட்டுமல்ல; இந்தியாவில் தொடங்கிய பல்வேறு சமூகநீதிப் போராட்டங்களுக்கான தொடக்கப் புள்ளி! அமராவதி கோயில் நுழைவு, பார்வதி கோயில் நுழைவு, நாசிக்-இல் இருக்கும் காலாராம் கோயில் நுழைவு போன்றவற்றிற்கு புரட்சியாளர் அம்பேத்கர் முயற்சிகள் காரணம் என்றால், தமிழ்நாட்டில் சுசீந்திரம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், திருச்சி மலைக்கோட்டை கோயில், மயிலாடுதுறை கோயில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ஈரோடு ஈஸ்வரன் கோயில் நுழைவுக்கு தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும்தான் காரணம். ஈரோடு ஈஸ்வரன் கோவிலுக்குள் 1929-ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்ததிலிருந்து, தமிழ்நாட்டின் பல கோயில்களுக்குள் சுயமரியாதை இயக்கத்துக்காரர்கள் நுழைய முடிவு செய்தார்கள். இந்த நிலையில்தான், 1939-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு, 'கோயிலுக்குள் வருகிறவர்கள் அனைவரையும் அரசு பாதுகாக்கும்' என்று உத்தரவாதம் பெறப்பட்டது.
கேரள சமூகச் சீர்திருத்தவாதிகளான டி.கே.மாதவன், கே.பி.கேசவ மேனன், கே.கேளப்பன், மன்னத்து பத்மநாபன், ஜார்ஜ் ஜோசப், டாக்டர் பல்ப்பு பத்மநாபன் போன்றவர்களும், தமிழ்நாட்டு சமூகச் சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், கோவை அய்யாமுத்து, எம்பெருமாள் நாயுடு, தங்கப்பெருமாள், நாகம்மாள், கண்ணம்மாள் போன்றோரும் ஒன்றாக சேர்ந்து நடத்திய போராட்டம்தான் வைக்கம் போராட்டம். தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டவர்கள் பட்டியல் மிக நீளமானது. தமிழ்நாட்டில் இதற்காக நிதி கொடுத்தவர்கள் அதிகம். சமூகச் சீர்திருத்தப் போராட்டங்களில் இதுபோன்ற ஒருங்கிணைப்புகள் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதற்கு மாபெரும் எடுத்துக்காட்டு வைக்கம் போராட்டம். 100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைவிட, இப்போது சமூகரீதியாகவும், அரசியல்வழியிலும், பொருளாதாரச் சூழலிலும் முன்னேறி இருக்கிறோம். ஆனால், இவை போதாது. இன்னும் நாம் முன்னேறிப் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி, ஏழை - பணக்காரன், ஆண் - பெண் ஆகிய பாகுபாடுகளுக்கு எதிரான நம்முடைய போராட்டத்தை நாம் தொடர வேண்டும். முன்பு இருந்ததை விட வேகமாக செயல்பட வேண்டும். நவீன வளர்ச்சியால் இந்த பாகுபாடுகளை முழுமையாக நீக்க முடியவில்லை.
அதற்கு மனதளவில் மக்கள் மாற வேண்டியது அவசியம். அனைத்தையும் சட்டம் போட்டு மட்டுமே தடுக்க முடியாது. சட்டம் தேவைதான், அதைவிட மனமாற்றமும் நிச்சயம் முக்கியம். யாரையும் தாழ்த்தி பார்க்காத சமத்துவ எண்ணம் மக்களின் மனதில் வளர வேண்டும். பகுத்தறிவு சிந்தனைகள் வளர வேண்டும். அறிவியல் கண்ணோட்டத்தோடு எதையும் அணுகும் பார்வை வளர வேண்டும்! தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், ஸ்ரீ நாராயணகுரு, மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் புலே, அய்யன்காளி, காரல் மார்க்ஸ் போன்றர்களின் கருத்துகளும் உழைப்பும் ஒவ்வொரு மனிதனையும் சென்றடைய வேண்டும். அதற்காகத்தான், 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற கொள்கையை அரசியல் கொள்கையாக மட்டுமல்ல, ஆட்சியின் கொள்கையாகவே தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசில் அறிவித்திருக்கிறோம். தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, தெருவில் நடந்தால் தீட்டு என்ற காலத்திலிருந்து கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை நோக்கி இன்று அடைந்திருக்கிறோம்! தமிழ்நாட்டைப் போலவே கேரளத்திலும் பல புரட்சிகரமான முற்போக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. வைக்கம் போராட்டத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது. அந்தப் போராளிகளை போற்றுவதற்காக மட்டுமல்ல! அவர்கள் விரும்பிய சமநிலைச் சமுதாயத்தை அமைப்பதற்கான நம்முடைய கடமையில் முன்னேறிச் செல்ல! வைக்கம் என்பது ஒரு தனிப்பட்ட வெற்றி அல்ல; தொடர் வெற்றிகளுக்கான தொடக்கம்! அந்த தொடர் வெற்றியை எல்லா துறையிலும் அடைய நாம் உறுதியோடு உழைப்போம்! எத்தகைய தடைகள் வந்தாலும், அவற்றை உடைப்போம்! கொண்ட கொள்கையில் வெல்வோம்! ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயம் அமைத்தே தீருவோம்! வாழ்க பெரியாரின் புகழ்! வாழ்க பெரியாரின் புகழ்!" எனத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *